Description |
அந்த வெம்மைக்குள் மதியும் காணாமல் கரைந்து உயிர் துறந்தாள். ஆனால் அவள் மீண்டும் நாளை உயிர் பெற்று வருவாள் தன்னவனைத் தேடி, ஓடோடி வருவான் அவனும் அவளைக் காண. பல ஆயிரமாண்டுகளாக அந்தக் காதலர்களின் முயற்சி மட்டும் நின்றபாடில்லை. தை மாதத்தின் அதிகாலையைத் தாண்டியிருந்த நேரம். குளிர், இழுத்து மூடியிருந்த போர்வையைத் தாண்டி உடல் வருடியதில் நித்திரை கலைந்தான் ப்ருத்வி ராஜ். இரவு வெகு நேரம் விழித்திருந்ததின் விளைவு, விழித்தும் கண் திறக்க மனமின்றித் தன்னவளின் கன்னம் உரசும் இதமும், மார்புச் சூடும் வேண்டி அவன் கைகள் அவளைத் தேடி மெத்தையில் துழாவியது. அவளில்லை , ஏமாற்றம் மட்டுமே. இருந்தும் அவள் வாசம் அந்த மெத்தையில் நுகர்ந்தான். அவன் மெத்தையில் புதிதாய்ப் பெண்ணின் வாசம், அவன் வீட்டிலும் புதிதாய் அதிகாலை காஃபி வாசம். அதை ஆழ்ந்து உள்ளிழுத்துச் சுவாசித்தவாறே எழுந்து சோம்பல் முறித்தான். நன்கு விடிந்தும் அவன் வேலையைத் தொடராததை அவனுக்கு உணர்த்த, ஜன்னல் வழி ஆதவனும் நுழைந்து வந்து விட்டான்... |