Description |
1960-70களின் லத்தீன் அமெரிக்க இலக்கிய வெடிப்பில் வெளிவந்த மேலும் ஒரு கவி, அர்ஜன்டைனாவைச் சேர்ந்த அலெயேந்திரா பிஸார்நிக். ஆன்மாவின் இருண்ட இரவுகளில் இருந்து வெளிப்படும் பிஸார்நிக்கின் கவிதைகள் மெளனத்தின் இழையில் தொங்கும், ‘கரையாத பயங்கரங்களைத் தூண்டும் அறிகுறிகள்.’ வாசிப்பவரின் சமநிலையை சீர்குலைக்கும் தெளிவான மெல்லிசை. லிலக் ஒளிக்கு முன்னால் நடுங்கிக்கொண்டிருக்கும் அவரது பாடல் அமைதியற்றது; நோய்மையும் சிதைவுற்ற சித்தமும் புலம்பலும் கவிதைகளாயின. ஆளுமைப் பிளவு அவரைப் பல குரலில் பேச வைத்தது. ஒன்றுக்கொன்று முரண்பாடுகொண்ட நிழல்பிரதிகள் அவருக்குள் பெருகிக்கொண்டே இருந்தன. மெய்ம்மையின் கரைக்கு அப்பாலும் சென்ற அவரால் மரணத்தை வாழ்வென ஏற்றுக்கொள்ள முடிந்தது. 36 வயதுக்குள் ஏராளமாக வாழ்ந்துவிட்டதாக எண்ணி, தன்மரணம் அடைந்தார். கவியும் கவிதையும் வேறுவேறல்ல என்பதை வாழ்ந்துகாட்டிய கடைசி அப்பாவிக்கவி அலெயேந்திரா பிஸார்நிக். |