Description |
மேஜர் முருகன் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தனது குடும்பத்தினருடன் பல மாநில மக்களுடன், பல மொழிகளைப் பேசி, பழகிய அனுபவம் பெற்றவர். பணி என்னவோ பயிற்சி, பாதுகாப்பு, துப்பாக்கி என்று கழிந்தாலும், எங்கு சென்றாலும் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களைத்தான் அதிகமும் கண்காணித்திருக்கிறார். அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களையும் குணாதிசயங்களையும் அக்கறையோடு சேகரித்து எழுத்தாக்க முயன்றிருக்கிறார். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சிறுவயதில் பழகிய மனிதர்கள், கேட்ட குரல்கள், பார்த்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்து, எதையோ இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்த, அவற்றையெல்லாம் எழுதாமல் விட்டுவிட்டோமே என்கிற மனஉறுத்தல் தலைதூக்கியிருக்கிறது. பிறகு, தான் பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும் தனது வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு, இக்கதைகளைப் படைத்திருக்கிறார். ‘மந்திரம்மாள்’ மேஜர் முருகன் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு. ஒரு ஆரம்ப எழுத்தாளருக்கே உரிய தன்மையில் இந்தச் சிறுகதைகள் அமைந்திருந்தாலும், ஒவ்வொரு கதையும் தேர்ந்த எழுத்தாளரைக்கூட மிஞ்சிவிடும் அளவுக்கு கற்பனை வளத்துடன் உள்ளது என்பதை இந்நூலை வாசிக்கும் வாசகர்களும் உணர்வார்கள். |