Description |
இந்திய வரலாறு எழுதுதலில் வரலாற்று ஆசிரியர்களின் ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையைப் பின் தொடர்ந்த பயணம் இது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இப் பயணம். அப்போது தெரியாது அது இப்படியான புத்தகமாக வரப்போகிறது என்று. அறிவுசார் உலகைச் சார்ந்த பலரது ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள், கூடுதல் தகவல்கள் என விரிவடைந்த இப் பணி முடிந்து அதனை புத்தகமாக தமிழ்கூறும் நல்லுலகத்துக்குக் கையளிக்கும் தருணம் வாய்த்துள்ளது. ஆறாம் திணை பதிப்பகம் தமது முதல் வெளியீடாக இப் புத்தகத்தை வெளியிட உள்ளது. இந்திய வரலாற்றினை வட புல அறிவுலகின் பார்வையிலேயே வாசித்து வந்த நமக்கு இப் புத்தகம் அப்பார்வையை சற்று தெற்கு நோக்கி கீழிறக்கி வழங்குகிறது. டி. டி. கோசம்பியின் 115 ஆவது பிறந்த நாளான எதிர்வரும் ஜூலை 31 அன்று கூடுமானவரையில் சிறப்பாக வெளியிடத் திட்டமிடப்படுகிறது. அதையொட்டி முன் வெளியீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் கையாளப்பட்டிருக்கும் மொழியாக்கங்கள், சுருக்கங்கள், மேற்கோள்கள் போன்றவற்றுக்கு குடும்பத்தார் மற்றும் பதிப்பகங்களிடமிருந்து உரிய முறையில் அனுமதி பெற்று இப் புத்தகம் வெளிவருகிறது. நான் மிகவும் மதிக்கும் தலைசிறந்த மார்க்சிய வரலாற்று, பண்பாட்டுக் கருத்தாளர்கள் ஆ. சிவசுப்பிரமணியம், ந. முத்துமோகன், ஜே. என். யூ வராற்றாய்வு பேராசிரியர் குணசேகரன், ஆய்வாளர் காமராசன் ஆகியோர் அணிந்துரைகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். இப் புதிய முயற்சிக்கு வரலாற்று ஆர்வலர்களின் நல்லாதரவு கோருகிறேன். |