Description |
மோகனச்சிலை சோழ சாம்ராஜ்யத்துக்கு விஜயாலயன் வித்திட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற இரண்டைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். ஆனால் சூரியன், சந்திரன் இன்னொரு வலுவான கிரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கிரகணம் பிடிப்பதையோ அதனால் உலகம் இருண்டு போவதையோ யாரும் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால் தமிழக வரலாறு அத்தகைய ஒரு கிரகணத்தை சிருஷ்டித்திருக்கிறது. சூரிய குலத்தவரான சோழர்களையும் சந்திர குலத்தினரான பாண்டியர்களையும் காடவர்களான பல்லவர்களையும், களப்பிரர் என்ற நாடோடி கூட்டத்தார் முறியடித்து மறைத்து தமிழகத்தை மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஆறாவது நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் அரசாண்டு தமிழக வரலாற்றையே இருள் மூளச் செய்துவிட்டார்கள். ஆகவே அந்த ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கிறோம். அந்த இருளை சூரிய குலத்தவனான விஜயாலயன் எப்படிக் கிழித்து தமிழகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரம் அமைத்தான் என்பதை விளக்குகிறது மோகனச்சிலை. அந்த இருண்ட காலத்தைப் பற்றி வரலாற்று வெளிச்சத்தை வீசுவது என்பது சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் சமீபகால ஆராய்ச்சிகள் அதற்குப் பெரிதும் உதவின. தவிர ஏற்கனவே நீலகண்ட சாஸ்திரியாரும், ராஜமாணிக்கனாரும் வீசியுள்ள சரித்திர ஒளிகளும், இன்னும் சில ஆசிரியரின் குறிப்புகளும், இந்த நூலைப் புனைவதில் பெரிதும் பயன்பட்டன. |