Description |
போரில் வெற்றிகண்ட மன்னர்கள், ரத்தம் குடித்த புலிகளாக, அடுத்தடுத்த தேசங்களுக்கு அலைவார்கள். ஆனால், மக்களின் துயரம் கண்டு நெஞ்சுடைந்து, இனி யுத்தமே வேண்டாமென்று சத்தியம் செய்த இன்னொரு மன்னரை இந்த உலகம் கண்டதில்லை. மதம் மாறுகிற ஒரு மன்னர் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி, தன் கொள்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மக்கள் மேல் திணிப்பார். தான் பெளத்தமதத்துக்கு மாறியபோதும், எம்மதமும் சம்மதம் என மனிதநேயத்தை முன்னிறுத்தும் மாமனிதர்கள் வரலாற்று அதிசயம். மண்ணை வெல்பவர்கள் மன்னர்கள். மக்களின் மனங்களை வெல்பவர்கள் மகாத்மாக்கள். உலக வரலாற்றில் மகாத்மாவான மன்னர் ஒரே ஒருவர்தான். அவர் - பேரரசர் அசோகர். காலம் பல அலங்கோலங்கள் செய்யும் - போற்றிப் புகழவேண்டியவர்களைக் குழி தோண்டிப் புதைத்து அங்கே புதர்மேடுகள் எழ அனுமதிக்கும். அயோக்கியர்களை ஆராதிக்கும். பேரரசர் அசோகர் என்னும் தகத்தாய சூரியனும் கருமேகங்களால் மறைக்கப்பட்டார், மறக்கப்பட்டார். ஓரிரு வருடங்களல்ல, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள். பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் அசோகர் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அந்த மாமனிதரின் வாழ்க்கை இதோ. அசோகரின் வாழ்க்கையையும், ஆளுமையையும் முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் இத்தகைய புத்தகம் இதுவரை தமிழில் வெளி வந்ததில்லை. ஜுலியஸ் சீஸர், மாவீரன் நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான், கிளியோபாட்ரா ஆகிய வரலாற்று நாயகர்களைத் தன் குதிரைப் பாய்ச்சல் நடையில் உங்களுக்குக் கொண்டுவந்த எஸ். எல். வி. மூர்த்தி அசோகரை அழைத்துவருகிறார். பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பு. ஆசிரியரின் கடும் உழைப்பின் பிரதிபலிப்பு. |