Description |
அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்கிற சகிப்புத்தன்மை காந்தியடிகளுக்கு இருந்தது. அதுதான் தலைமைத்துவத்தில் மிகவும் முக்கியமானது. ‘எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு யாரும் வந்து புத்திமதி சொல்ல வேண்டியதில்லை, மற்றவர்கள் சொல்லி அதைக் கேட்டு நான் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்கிற அகந்தை இருந்தால் அது தலைமைத்துவம் இல்லை. அதுமாதிரியான அகந்தை இல்லாத ஒரு தலைவராக காந்தி இருந்திருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. யார் சொன்னாலும் அதை உள்வாங்கக் கூடிய, அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளக்கூடிய, அதில் திருத்தப்பட வேண்டியது ஏதாவது இருந்தால் அதைத் திருத்திக்கொள்ளக் கூடிய அந்த உயர்ந்த பண்பு அவரிடத்திலே இருந்தது. அதுதான் அவரை அந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது.” சித்ரா பாலசுப்ரமணியன் அக்கா நிகழ்த்திய காந்திய நேர்காணலில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் குறிப்பிடும் வார்த்தைகள் இவை. காந்தியைப் பற்றி திருமா அவர்கள் உரையாடிய அரிய நேர்காணல், தோழமை கார்த்தியின் மூலம் எழுத்தாக்கம் அடைந்து தன்னறம் நூல்வெளி வாயிலாக புத்தகமாக உருப்பெறுகிறது. இந்நூலுருவாக்கதிற்கு ஒளிப்படங்களை அனுப்பித்தந்த பாலாஜி கங்காதரன் அவர்களுக்கும், விகடன் குழுமத்திற்கும் மற்றும் வடிவமைப்பாளர் தியாகராஜன் அவர்களுக்கும் என்றென்றைக்குமான நன்றிகள்! முரண்கருத்து உள்ளவரோடும் தன் வாழ்வின் இறுதிவரை உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருந்த காந்தியைப் பற்றிய மற்றுமொரு ஆழக்கண்ணோட்டத்தை இந்நூல் தாங்கியிருக்கிறது. |