Description |
சிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், மரபுகள், தொன்மங்கள், மொழிகள் என அனைத்திற்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தைச் சொல்லிச் செல்கிறது. இடம் மறுக்கப்பட்ட இடத்தில் தனக்கான இடத்தை உருவாக்கும் செயல்பாடுதான் பெண்ணியச்செயல்பாடு எனில் அது எதிர்காலம் பற்றியதாக மட்டுமின்றி, இதுவரையான காலங்களையும் தன்வயப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. வரலாற்றுக் கதையாடல்களைப் பெண்மொழியில் மறுஆக்கம் செய்வதிலிருந்து எதிர்க்கதையாடல்களைப் பெண்ணெழுத்தில் பெருக்குவதுவரை அனைத்தையும் பெண்ணிலையாக்கம் செய்வது பற்றிய ஒரு திட்டத்தை சிமாமந்தா தொடர்ந்து முன்வைத்து வருகிறார். பின்காலனிய கதையாடலைப் பெண்ணிய இயங்கியலுடன் இணைப்பதன் வழியாக வெள்ளைமைய உலகையும் ஆண்மைய உலகையும் ஒருசேர சிதைவாக்கம் செய்யும் ஆற்றலைப் பெருகின்றது சிமாமந்தாவின் கதைமொழி. சிமாமந்தா பெண்ணியத்தின் ஒரு முக்கியபகுதியான கருப்பினப் பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பவர். அதனால் இந்திய-தமிழ்பெண்ணியத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பொருந்தக்கூடிய கதைமொழியைக் கொண்டவர். |