Description |
இவர்கள் புதிய எழுத்தாளர்கள். சிலர் ஓரிரு ஆக்கங்கள் எழுதியவர்கள். சிலர் எழுத ஆரம்பித்தவர்கள். என்னுடைய இணைய தளத்தில் இந்தக் கதைகளைத் தொடர்ச்சியாக எழுத்தாளர் பற்றிய அறிமுகக்குறிப்புடன் வெளியிட்டேன். காரணம், என் குழுமத்தில் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சமீபத்தில் பேசப்பட்ட கதை என்ன என ஒருவர் கேட்டிருந்தார். சட்டென்று எவராலும் சொல்லமுடியவில்லை. சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால், சென்ற சில வருடங்களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக் கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. சொல்லப்போனால், சில கதைகளை நான் இந்தத் தளத்தில் சுட்டிக்காட்டியபோதே ஏதேனும் ஒரு கவனம் அவற்றுக்கு உருவானது. கலைசார்ந்த ஒட்டுமொத்தமான ஒரு விவாதச்சூழலே கலைகளை உருவாக்க முடியும். ஒரே தரத்திலான வேகம் கொண்ட ஐம்பது பேர் இருந்தால் போதும் - இலக்கியம் வாழும், வளரும். அந்த எண்ணிக்கைகூட இன்றிருக்கிறதா என்ற ஆழமான ஐயம் எனக்கு உள்ளது. இச்சூழலில் நான் தேர்ந்தெடுத்த இக்கதைகள் நம்பிக்கைக்கான முகாந்திரமாக அமைகின்றன. |