Description |
மொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாதுர்யங்களும், சந்தர்ப்பங்களும் பின்னிக் கிடக்கின்றன. அனைத்துச் சமயத்தினரையும் ஒருங்கிணைக்கப் பெரும்பாடுபட்ட அக்பரின் வாழ்நாள் முழுவதும் உட்பகை தொடர்ந்து ஊடாடியது. உறவுகளின் துரோகங்களும் சூழ்ச்சிகளும் எந்நேரமும் அவரின் மணிமுடிக்காகவும், மரணத்திற்காகவும் காத்திருந்தன. இவற்றையெல்லாம் எதிர்கொண்டும், வென்றும், இந்திய மக்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் அக்பர். |