Description |
பரமனைப் பாடும் பாசுரச்சொல் ‘வாரணம் ஆயிரம்‘ மக்கள் திரள் ரசிக்கும் ஒரு படத்திற்குப் பெயராகிறது. க.நா.சு. தான் எழுதிய நாவலுக்குப் பொய்த் தேவு என்று பெயரிட்டார். அச்சொல் திருவாசகம் தந்த கொடை. ஞானக்கூத்தனின் ‘என் உளம் நிற்றி நீ’ தாயுமானவர் தந்தது. கலாப்ரியாவின் ‘உருள் பெருந்தேர்’ வள்ளுவர் சுழற்சி. இதுபோல முற்காலத்திலும் காலத்தால் முற்பட்ட இலக்கியத்தின் வசீகரச் சொற்களை வரித்துக்கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த வகையில் கம்பனும் வள்ளுவரிடம் வசப்பட்டிருக்கிறார். ‘செய்தவம், வாலறிவன், மனைமாட்சி, கணங்குழை, தாக்கணங்கு, தவ்வை உள்ளிட்ட எண்ணற்ற வள்ளுவச் சொற்களைக் கம்பன் கைக்கொள்கிறார். கம்பனுக்குக் காளிங்கர் உரையும் மணக்குடவர் உரையும் பரிச்சயம் உண்டு’ என்று பலசான்றுகளை இந்நூலில் தெளிவாக முன்வைக்கிறார் தெ.ஞா. வைரத்தை எடையிடும் மின்னணுத் தராசின் துல்லியம் கொண்டவை, தெ.ஞா.வின் ஆய்வு முடிவுகளும் அதிசயிக்க வைக்கும் ஒப்பீடுகளும். தெ.பொ.மீ., அ.ச.ஞா., மு.அ. என்ற வரிசையில் தெ.ஞா.வை வணங்குகிறோம். |