Description |
தென்கிழக்கு ஆசியாவில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 500 ஆண்டுகளாக அவர்கள் பல நிலைகளில் இந்த வட்டாரத்தில் வணிகம் செய்தும், தமிழ் பண்பாட்டுக் கூறுகளை பரப்பியும், மலாய் மொழி வளர்ச்சியில் ஈடுபட்டும் வந்திருக்கின்றனர். குறிப்பாக நீரிணைக் குடியேற்ற நாடுகள் என்று நாம் கூறும் மலாக்கா-பினாங்கு-சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அவர்களின் ஈடுபாடு மிகவும் ஆழமாக இன்றும் மிளிர்கிறது. தொடர்ந்து தமிழ் முஸ்லிம்களின் சமூக பங்களிப்பை ‘சிங்கப்பூர் தர்கா தொடர்பு பாரம்பரியம்’, ‘சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் புரவலர்களின் இன நல்லிணக்கப் பணிகள்’ ஆகியவற்றில் அவர் சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பணியை ஒரு அகன்ற பார்வையோடு நமக்கு எழுதியுள்ளார். முனைவர் சலீம் அவர்களுக்கு தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருப்பது அவர் எழுதியுள்ள பல அத்தியாயங்களில் நாம் உணரமுடியும். ‘சூபிகளின் கூட்டு மொழி’, ‘சிங்கப்பூர் பெண் மொழி’, ‘இக்பாலின் கவிதை மொழி’, ‘ஷாநவாஸின் இலக்கியச் சமையல்’, ‘மணல் உரையாடலில் புதைந்து கிடக்கும் சொற் சமிக்ஞை’, ‘கம்ப நாடனும் காப்பிய உமரும்’, ‘இராம கண்ணபிரான் வாழ்வு கதைத் தொகுப்பு’, ‘சூரிய கிரஹணத் தெரு’, ‘சிங்கை மா இளங்கண்ணனின் வைகறைப் பூக்கள்’, ‘பொன் எழுத்து’ போன்ற கட்டுரைகளில் சிங்கப்பூர் எழுத்தாளர்களான பாவலர் க.து.மு. இக்பால், பொன் சுந்தரராசு, இராம கண்ணபிரான், கமலாதேவி அரவிந்தன் ஆகியோர் நூல்களைக் கொண்டு அந்த எழுத்தாளர்களின் சமுதாயப் பார்வையை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். |