Description |
அது ஒரு காலம். பெண்கள் ஆண்களுக்குச் சமமாக இருந்த காலம். போட்டிகளிலும் பந்தயங்களிலும் ஆண்களைப் பெண்கள் தோற்கடித்த காலம். பெண்கள் ஆண்களைவிட பலசாலிகளாக, புத்திசாலிகளாக, கூர்மையாக - ஏன், அழகாகக்கூட இருந்த காலம். கற்பனைத் திறமையும் சிருஷ்டித் திறனும் ஆண்களைவிட அதிக அளவில் பெற்றிருந்த காலம். குஜராத் மாநிலத்தின் வடக்கு எல்லையில் ராஜஸ்தானைத் தொட்டிருக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் துங்ரி கரேஸியா ஆதிவாசிகளிடையே வெகுகாலமாகப் புழங்கிவந்த கதைகள் இவை. காமத்தில் திளைக்கும் ராஜா ராணிகள் முதல் காதல் வயப்படும் இளைஞர்கள் வரை அனைவருக்கும் உடலின்பமே உயிரோடு இருப்பதுவரை தேவையான ஒன்று என்கின்றனர். கடவுள்கூட பெண்தான், ஆணல்ல. அவளே தன் மக்களிடையே காதலை ஏவிவிட்டு ஆட வைக்கிறாள். பறவைகள், விலங்குகள், இடையே வாழும் இயற்கையோடிணைந்த வாழ்க்கை அவர்களுடையது. நிர்மலமான ஆற்று நீரில் குளிக்கும் இளம் பெண்களோடு காதல் புரியும் ஆண்மை மிக்க இளைஞர்கள் நிரம்பிய இந்தக் கதைகளில் மாற்றாந்தாய்க் கொடுமை, கொலை செய்யும் மனைவி, கொடுங்கோல் மன்னன் போன்றவர்களும் இடம்பெறுகின்றனர். |