Description |
பெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிரசவ காலம் வரை உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது! ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றாலும்கூட, கரு வளர்ச்சியின் போது ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்கு இன்றும் உதவக்கூடியது அந்தக்கால பாட்டி வைத்தியம்தான். அந்தவகையில், கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய பாரம்பரிய வழிமுறைகளோடு பல பயிற்சிகளையும் விளக்கி, இந்த நூலில் நம்பிக்கை தரும் விதத்தில் எழுதியிருக்கிறார் ரேகா சுதர்சன். மனநல ஆலோசகரும், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியருமான ரேகா சுதர்சன், அவள் விகடன் இதழ்களில் எழுதிய அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சிசேரியன் எப்போது அவசியம், சுகப்பிரசவம் எப்படி உடல் ரீதியாக சுகம் தரும் என்பது போன்ற தகவல்களும், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. பிரசவ காலத்தைப் பற்றிய பயம் தேவையற்றது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள ஒரே மருந்து மன வலிமைதான் என்பதையும், அந்த மன வலிமையை ஏற்படுத்திக் கொள்ள எளிய வழிமுறைகளையும் இந்த நூலின் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். மொத்தத்தில் சுகப்பிரசவத்துக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக தயார்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் வழிகாட்டி இந்த நூல். |