Description |
தூய்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது பால். தாய்ப்பாலைப் போன்று தூய்மையானது என்று பாலின் மகத்துவத்தை அறிந்திருக்கிறோம். உடல் வளர்ச்சிக்கும், உள்ளத்து எழுச்சிக்கும் பால் வகைகள் உதவிபுரிகின்றன. பால் என்றால் தாய்ப்பால், மாட்டுப்பால், ஆட்டுப்பால் மட்டுமா? கோதுமைப்பால், நிலக்கடலைப்பால், சூரியகாந்திப்பால், அபிஷேகப்பால், தேங்காய் பால், நவதானியப்பால்... என வகை வகையான பால் வகைகள் நமக்கு நன்மைபுரிகின்றன. மரங்களில் இருந்து வடியும் பால் வகைகளும் மனிதருக்கு நன்மை பயக்கின்றன. பால் தரும் மரங்களில் இருவகை உண்டு. பருகத்தக்க பால் தரும் மரம். பருகத் தகாத பால் தரும் மரம். தென் அமெரிக்காவில் ஒரு குன்றின் பாகத்தில் பால் மரம் என்ற பெயர்கொண்ட மரம் ஒன்று உள்ளதாம். இம்மரம் வளரும் இடத்தில் மழை வராது என்பர். வேர்கள் தடித்துப் பாறைகள் நடுவே நுழைந்திருக்கும். வானுயர ஓங்கி வளரும். இலைகள் வாடி வதங்கியே தோன்றும், இம்மரத்தின் அடிப்பாகத்தைக் கீறினால் நாவிற்கினிய பால் வடியும். சூரியோதயத்தில் அதிகமாகப் பால் கிடைக்கும். இதுபோன்ற பால் வகைகளின் பயன்கள் என்ன? எந்தப் பால் எந்த நோயைத் தீர்க்கும் என்பன போன்ற எண்ணற்ற தகவல்களை நூலாசிரியர் நமக்குத் தருகிறார். சுவைக்கு எடுத்துக்காட்டாகவும், சுறுசுறுப்புக்கு அடையாளமாகவும் திகழும் தேன் என்னும் அமுதத்தின் அற்புதங்களையும் இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். நூற்றுக்கணக்கான தேன் வகைகளையும், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினையும், பயன்களையும் நமக்குத் தருகிறது இந்த நூல். ‘பால்வகை மருத்துவமும், தேன் வகை மகத்துவமும்’ என்ற இந்த நூல் உங்கள் கையில் இப்போது தவழ்கிறது. இனி நீங்கள் மருத்துவர் வீட்டுக்கதவைத் தட்டத் தேவையில்லை என்பதை உணரப்போகிறீர்கள்... பக்கத்தைப் புரட்டுங்கள். |