Description |
‘இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு’ என நம் முன்னோர் சொல்லிவைத்தனர். உடல் நலனைப் பேணிக்காத்தால் வாழ்க்கையும் இயல்பாக இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. மருத்துவமனைக்கே செல்லாத தலைமுறைகள் முன்பு இருந்தன. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் இயற்கையோடு இயைந்திருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் எப்படி இருக்கின்றனர்? மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளில் கூடும் கூட்டத்தைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். சர்க்கரை நோய் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தமிழ்ச் சமூகத்தில் இப்போது எங்கெங்கு பார்த்தாலும் சர்க்கரை நோயாளிகள்தான் உருவாகிக்கொண்டிருக்கின்றனர். நம் பாரம்பர்ய உணவுகளையும் வைத்திய முறைகளையும் மறந்ததால், மறுதலித்ததால் வந்த விளைவு இது. என்றாலும் இந்தத் தலைமுறையினரின் பார்வை நம் பாரம்பர்ய உணவுகளின் மீது திரும்பிக்கொண்டு வருவது வரவேற்கக்கூடியதாகும். இந்த நூல் அதைத் தான் வலியுறுத்துகிறது. இயற்கையான இனிப்பில் கிடைக்கும் நன்மைகள், சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவு உண்ணலாமா, மழைக்காலத்தில் கிடைக்கும் கீரைகளால் ஏற்படும் நலன்கள், குழந்தைகளுக்கான எளிய சித்த மருத்துவ முறை, கடல் உணவுப்பொருள்களால் குணமாகும் நோய்கள் என இயற்கைவழி கிடைக்கும் உணவுகளின் நன்மைகளைக் கூறுகிறது இந்த நூல். உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு இந்த நூல் அடித்தளம் இடும் என்பது நிச்சயம்! |