Description |
நகைச்சுவையாய் எழுதுகிறேன் பேர்வழி என ‘நகைச்சுவை’ என ‘டேக்’ போட்டு எழுதும் பெத்தாம் பெரிய எழுத்தாளர்க்கெல்லாம் ‘தண்ணி காட்டும்’ தமிழ், மதுக்கூர் ராமலிங்கம் பேணாவிடம் சொன்ன பேச்சு கேட்கிறது. கடும் காப்பியின் மையத்திலிருக்கும் மதுரமான சுவை போல, அவர் நகைச்சுவையாய் எழுதும் பத்தி எழுத்தில் சமகால வாழ்வின் துயரம், அபத்தம் இவற்றைப் போக்க அல்லது குறைந்தபட்சம் மட்டுப்படுத்த இடைவிடாது நடக்கும் போராட்டம் எல்லாம் இழையோடி உள்ளது. மிகுந்த திட்டமிடல் இல்லாது இதழ் வெளியீட்டின் நெருக்கடியில் உருவான எழுத்துகள் என்பதாலேயே அவை உயிரோட்டமான, தோழமையான உரையாடலின் மகிழ்ச்சியை அளிப்பவையாக உள்ளன. ‘கடலை அளந்தது யார்? இது என் கையளவு கடல்’ என்று அவர் கூறுகின்றார். இருக்கலாம்! ஆனால் ‘வனத்தைத் தன் காலில் தூக்கிப் பறந்து வரும் வண்ணத்துப் பூச்சி’ போல சமகாலக் தமிழ் வாழ்வின் பல குறுக்கு வெட்டுத் தோற்றங்களை ‘அவரது கையளவு’ கடல் நமக்குக் காட்டுகின்றது. |