Description |
“இந்திய வரலாற்றில் விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே கல்வி குறித்துப் பலரும் சிந்தித்து வந்திருக்கிறார்கள்.லாலா லஜபதிராய்,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தாமே கல்வி நிறுவனத்தை நிறுவி செயல் வடிவிலும் காட்டியிருக்கிறார்.காந்திஜி தம் வாழ்நாள் நெடுக இந்தியச் சூழலுக்கேற்ற கல்வி குறித்துச் சிந்தித்தும் செயல்படுத்தியும் வந்தவர்.அண்ணல் அம்பேத்கர் காலங்காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கற்பிப்பதும்,அவர்களை ஒன்றுசேர்ப்பதும் சமூகப் புரட்சிக்கு முன் நிபந்தனைகள் எனக் கூறி வந்தவர்.தாய்மொழி மூலம் கற்றல்,ஆளுமையுடன் திகழ ஏற்ற கல்வி,சரீரப் பயிற்சியால் வலுப்பெறும் திடமான உடலை வடிவமைக்கும் உடற்கல்வி,வரலாற்று உணர்வு மிக்க,விஞ்ஞானத் தொழில்நுட்பக் கல்வி,உலகெங்கும் வளரும் மேன்மைக் கலைகளை எட்டுத் திக்கும் சென்று கற்று வருகிற கல்வி,முழுமைப் பரிமாணம் கொண்ட ஞான விருத்திக்கான கல்வி-இவ்வாறாக பாரதி மக்களுக்கான ஜனநாயகக் கல்வி அமைப்பு ஒன்றை வென்றெடுப்பதற்கான பன்முகச் சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கிறார்.சமச்சீர் கல்வி,ஜனநாயகப்படுத்தப்பட வேண்டிய பொதுக் கல்வி குறித்த ஏராளமான கருத்துக்கள் முரண்பட்டு மோதத் தொடங்கியுள்ள இன்றையச் சூழலில் காலத்தின் தேவை இந்நூல் எனலாம்.” |