Description |
ஜாதி என்ற சொல்லுக்கு பொருள் ஒருவன் பேச்சு . எவ்வளவு எளிமையாக அழகாக செம்மையாக சரியாக ஆத்ம பிதா அவர்கள் அருளிச்செய்தனர்! ஒருவன் பேச்சு அன்றி உண்மையில் ஜாதி இலதே.'ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா ஜாயதே த்விஜ : வேதப் பாராயணே விப்ர: ப்ரஹ்மஜ் ஞானேதி பிராஹ்மண:' என்பது மறைமொழி. உயிர்கள் யாவும் பிறப்பது சூத்திரர்களாகவே. சூத்திரன் என்பது ஒரு சாதி அன்று, அதொரு குணம் - சுவாபம் அல்லது வருணம் - அதாவது அகங்காரம். இதனையே வள்ளுவனாரும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனப் பகர்ந்தனர். "த்விஜ' என்றால் இரண்டாம் பிறவி – மறுபிறவி. கர்மம் செய்ய மறுபிறவி உண்டாகிறது. வேதத்தை பாராயணம் செய்யும் போது அதாவது தன்மயமாக்கும்பொழுது விப்ரன் அதாவது விசேஷ அறிவுடையோனாகும். பிரம்ம ஞானம் அதாவது அனைத்தும் தாமே என்ற ஞானநிலை வாய்க்கும்போது பிராமணன் ஆவதாம். இதினின்றும் பிராமணன் என்றொரு ஜாதியோ அல்லது பிறவியோ இல்லை என்பது திண்ணம். எனவே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு ஜாதிகளிலாக யாரும் பிறப்பதில்லை; அவை தன்னிலிருந்துண்டான நான்கு வருணங்கள் அதாவது சுபாவங்களான மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என ஆத்மபிதா அவர்கள் தம் சித்தவேதம் எனும் ஐந்தாம் வேத நூலில் ஐயம்திரிபற விளக்கியருளியுள்ளனர். மனமே வேதத்திற்கு, அறிவிற்கு அதிகாரி ஆகும், மற்று மூன்றும் மனத்தைக் காப்பாற்ற வேண்டும், அப்பொழுது மனமது செம்மையாகி கைவல்லியம் சித்திக்கும். இல்லாவிடில் மனமது கீழ்ப்பதிந்து நரகமெய்துவதாம். இதுவே நான்கு வருண தத்துவம். எனவே நான்கு சாதியினராக யாரும் பிறப்பதில்லை . அவ்வாறு பாகுபாடு செய்வதும் மடமையாகும். |