Description |
குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்பமான பல்வேறு இழைகள் ஊடாடும் புனைகதைகளால் இத்தொகுப்பு உருவெடுத்திருக்கிறது. ஒடுக்கப்படுதலின் துயரமும், தனிமையும் தோய்ந்த பெண் வெளியைக் கலைத்து கொண்டாட்டமானதோர் உயிர் வெளியைக் கட்டமைக்கிறது. அழகியலும் அரசியலும் இணைந்து முயங்கும் அலாதியான இரசவாதம் இது. யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள், கதைக்களத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை. பெண், ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை, முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இக்கதைகள் கண்டறிந்து சொல்கின்றன. மிச்சமிருக்கும் நம்பிக்கைகள் இதுவரை இழந்த நம்பிக்கைகளை விட மேலானவை என்று முணுமுணுக்கின்றன. மனம் இயங்கும் தீவிரத் தளத்திலிருந்து எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் இல்லாமல் தாமே வெளியே வந்து குதித்த பூனைகளாய் இருக்கின்றன இக்கதைகள். |