Description |
இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டி வரப்பட்ட பரம்பரைகளின் வழித்தோன்றல்களாக இன்றும் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, அங்கேயே உடல் தேய வேலை செய்து, மரித்து, அதே பயிர்களுக்கு உரமாகிப் போகும் ஏழைக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்து எவரும் அண்மையில் இந்தளவு விஸ்தாரமாக எழுதியதில்லை என்றே தோன்றுகிறது. மலையக மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் இயற்கை அனர்த்தங்கள், அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவை குறைபாடுகள் மற்றும் வறுமை மாத்திரமல்லாமல் அவர்கள் பெருநகரங்களுக்குத் தொழில் தேடி வரும்போது எதிர்கொள்ள நேரும் இன்னல்கள், வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும்போது முகங்கொடுக்க நேரும் அசௌகரியங்கள் என யதார்த்த வாழ்வில் எந்தளவு துயரங்களை அவர்கள் சந்திக்க நேர்கிறது என்பதை இந்த நாவல் மூலம் அறிந்து கொள்ளலாம். முழுக்க முழுக்க தமிழர் வாழ்வியல் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள முதல் நாவலாக இதைக் குறிப்பிடலாம். |