Description |
1856. அவத் ராஜ்ஜியத்தின் தலைநகரமான லக்னோ கிழக்கிந்திய கம்பெனியின் பேராசைக் கரங்களுக்கு இலக்காகிறது; நவாப் கல்கத்தாவில் கம்பெனியின் உயரதிகாரிகளைச் சந்திக்கக் கோரிக்கை மனுவோடு முகாமிட்டிருக்கிறார்; அவரின் தாயாரோ லண்டனில் விக்டோரியா மகாராணியின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்; இந்தச் சூழலில் நவாப்பின் இரண்டாம் மனைவியான, அரச குடும்பத்தில் பிறக்காத, அரசி என்ற அந்தஸ்து அளிக்கப்படாமல் காமக் கிழத்திகளில் ஒருத்தியாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் பேகம் அஸ்ரத் மகல் கம்பெனிப் படையின் அத்துமீறல்களை எதிர்கொண்டு தனது இளம்வயது மகனுக்கு முடிசூட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டி லக்னோவை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி வென்றதா? லக்னோ காப்பாற்றப்பட்டதா? இந்தக் காலகட்டச் சம்பவங்களை, நவாப் குடும்பத்தின் நம்பிக்கைக்குக்குரியவளும் அவரது கருவூலத்தின் பாதுகாவலாளியும் தாய் வழியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவளும் போராளியுமான அமா என்ற இளம்பெண்ணின் வாழ்வனுபவங்களாக நாவல் விரிக்கிறது. போர்ச்சூழலின் வக்கிரமான புற அழிபாடுகளைப் பற்றிய விவரணைகள் ஒரு போர்க்களத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன; மனித உணர்வுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் இவற்றிற்குப் போர் விடுக்கும் சவாலும் நெருக்கடியும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதமும் காத்திரமான பாத்திரங்களின் மூலம் நாவலில் நுட்பமாக வெளிப்படுகின்றன. |