Description |
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த பல நூறு கதைகளை மையச்சரடாகக் கொண்டு புனைந்த நீள்கதையே இந்த ஹபீபி என்கிற அவருடைய இரண்டாவது நாவல். இதற்கு முதல் பட்டக்காடு என்கிற அவருடைய முதல் நாவல் 2020 இல் ஸீரோ டிகிரி (எழுத்து பிரசுரம்) பதிப்பாக வெளிவந்தது. தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் அமல்ராஜ், தன்னுடைய அனுபவங்களின் ஊடாகக் கடந்து வரும் சம்பவங்களையும், மனிதர்களையும், தேசங்களையும் மையத்தளங்களாக வைத்துக்கொண்டு தன்னுடைய கதைகளைப் புனைவுகளாகப் படைக்கிறார். அவருடைய எழுத்துகளில் வரும் மனிதர்களும் அவர்கள் சொல்லும் கதைகளும் பல்வகைமைத்துவம் மிக்க மானிட சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களிலான வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிக்கின்றன. |