Description |
கடந்த கால நினைவுகளைக் கடந்து வந்த பாதைகளை மீண்டும் நினைப்பது சுகமானதுதான். அந்த காலத்துல என்று பேசும்போதே அனைவரின் முகத்திலும் மலர்ச்சி அடையும். கடந்த காலத்தில் சுகமும் உண்டு, சுமையும் உண்டு,கடந்த காலத்தில் இனிப்பும் உண்டு, கசப்பும் உண்டு. இரண்டும் கலந்தது தான் அனைவரது வாழ்க்கை. எதுவாக இருந்தாலும், கடந்து வந்த பாதையை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. கோபாலபுரம் இளைஞர் தி.மு.கவை நான் தொடங்கிய காலத்தில் என்றாவது ஒருநாள் தி.மு.க வின் தலைவராக நான் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனக்கு உயிரும், உணர்வுமாய், தந்தையும், தாயுமாய் தலைவருமாய் இருந்த தலைவர் கலைஞர்கள் அவர்கள் அமர்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் என்றாவது ஒருநாள் நான் உட்காருவேன் என்றும் அந்தக்காலத்தில் நான் நினைத்தது இல்லை. ஆனால் எனது இலக்கை நான் மிகச் சரியாகவே தீர்மானித்தேன். கழகம் தான் என் களம். திராவிடம் தான் என்னுயிர்க் கொள்கை. தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்மையே நமது அன்றாடப்பணி என்பதாக என்னை எனது சிறுவயதில் வடிவமைத்துக்கொண்டேன். 1996-ம் ஆண்டு சென்னை மாநகர மேயராக நான் பொறுப்பேற்றபோது என்னைப் பார்த்து நிருபர் ஒருவர், "நீங்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?" என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன் “இல்லை! நான் அரசியலில் தான் இருந்திருப்பேன்” என்று சொன்னேன்.கேள்வி கேட்ட அடுத்த நொடியே சொன்ன பதில் அது. நான் அரசியலாகத்தான் இருந்தேன், வளர்ந்தேன் என்பதை இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள்.கோபாலபுரம் என்ற வீட்டில் அல்ல, கொள்கைக்கூட்டில் வளர்ந்தவன் நான். அங்கு நான் மட்டுமா வளர்ந்தேன், இனமானமும் மொழியுணர்வு கொண்ட அனைவருக்கும் அதுதான் பாசறை. அந்தவீட்டில் சிறுவனாக அல்ல, கொள்கைக்காரனாக நான் வளர்ந்தேன். எனக்கு முன்னாள் கொள்கையின் அடையாளமாக தந்தை பெரியார் எழுந்து நிற்கிறார். ஆஒரு இயக்கத்தை கோட்பாடு அடிப்படையிலும் பலதரப்பட்ட வகையினரையும் எப்படி அரவணைத்து நடத்தி செல்லவேண்டும் என்பதை பேரறிஞர் அண்ணா அடையாளம் காட்டுகிறார்.கொள்கையும் கோட்பாடும் உள்ள ஒரு இயக்கத்தை எந்த சூழ்நிலையிலும் இடையறாத போராட்டங்களின் மூலமாக உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும், என்பதை தனது வாழ்க்கை மூலமாக தினமும் உணர்த்திக் கொண்டே இருந்தார் தலைவர் கலைஞர்.பொறுமையுமும், அடக்கமு்ம் கொண்டவராகவும் அதே நேரத்தில் தெளிவும் துணிச்சலும் கொண்டவராக ஒருவர் திகழவேண்டும் என்பதை இனமானப் பேராசிரியர் அடையாளம் காட்டிக்கொண்டு இருந்தார். |