Description |
இந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல் நடந்த புரட்சிதான். ராம் மனோகர் லோகியா.. போன்ற சோசலிஸ்ட் தலைவர்கள் பங்கேற்று நடத்திய இந்த ஆகஸ்ட் புரட்சியின் முழு விபரமும் இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர். விடுதலைக்கு வித்திட்ட இந்த ஆகஸ்ட்-9 புரட்சியை பின்தள்ளிவிட்டு, விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட 1947, ஆகஸ்ட், 15-ஐத்தான் நாம் பெருமைப்படுத்திக் கொண்டாடி வருகிறோம். இது ஒரு வகையில் காந்திஜியை பின்தள்ளி, ஜவஹர்லால் நேருவை முன்னிலைப்படுத்தும் செயலாகும் என்று கூறும் இந்நூலாசிரியர், 1942 ஆகஸ்ட் புரட்சியின்போது மறைக்கப்பட்ட உண்மைகள் யாவை என்பதையெல்லாம் இந்நூலில் விவரிக்கிறார். அதில் இரண்டாம் உலகப் போர் உருவான சம்பவங்கள் தொடங்கி, ஆகஸ்ட் புரட்சிக்கு இப்போர் எப்படி காரணமானது என்று தொடர்ந்து, இப்புரட்சியின்போது ஆட்சியாளர்களிடத்திலும், போராட்டத் தலைவர்களிடத்திலும் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகள் வரை – அன்றைய கால காட்டங்களில் நடந்த சரித்திரச் சம்பவங்களை சுமார் 15 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஆகஸ்ட் புரட்சியை மையமாக வைத்துத் தொகுப்பட்ட இந்நூல், இன்றைய தலைமுறையினர் படித்துணர வேண்டிய நூலாகும். |