Description |
இந்தியா எனும் வரைபடத்தை உருவாக்கி அதனை ஒரே நிலப்பரப்பாக காட்டி, துப்பாக்கி முனையில் இந்நாட்டைக் கட்டி ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா வரலாற்றில் ஒருபோதும் ஒரே நாடாக என்றைக்கும் இருந்தது இல்லை என்பதுதான் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவுக்கு என்று தேசிய அடையாளம் (National Identity) என்று ஏதாவது இருக்கிறதா? எப்போதும் இருந்தது இல்லை; இனி எப்போதும் அத்தகைய அடையாளத்தை உருவாக்கவும் முடியாது; ஏனெனில், நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா 1962இல் முழங்கியது போல, இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம். இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் தொகுப்பு; பல மொழிகள் - பல பண்பாடுகள் - பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதை ஆர்.எஸ்.எஸ்., எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொண்டது இல்லை. பூகோள ரீதியான தேசியம் (Territorial Nationalism) என்கிற இயல்பான கோட்பாட்டை நிராகரித்து ‘கலாச்சார தேசியம்’ அதாவது ‘இந்து தேசியம்’ (Cultural Nationalism) என்பதை உருவாக்க வேண்டும் என்பதே இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. |