Description |
இராவணன்: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிக்கவும் எனக்கு அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்வமேத யாகத்தையா அழித்தேன்? என் ஆளுகையில் இருந்த தண்டகாரண்யத்திலே, தவசி வேடத்தில் புகுந்து, என் தடை உத்தரவை மீறினவர்களை, யாக காரியங்கள் செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச் செய்தனர். அழித்தேன். உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில், அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குலமுறைக்குத் தகாது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய ராமன். ஆரிய பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அநாரியத் தவசியைக் கொன்றான் அவன் அது என் உரிமை என்றான். என் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா? |