Description |
மனிதன் பிறக்கும்போது தாயின் ஸ்பரிசம்தான் முதலில் கிடைக்கிறது. அடுத்தது தாய் மண்ணின் ஸ்பரிசம். ஒருவர் எந்த நிலைக்குச் சென்றாலும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பாசம் பட்டுப்போகாது. ஆனால் தங்கள் சொந்த மண்ணை விட்டு இன்னோர் நாட்டில் அகதிகளாக வாழ்வது என்பது பெரும்துயரம். உள்நாட்டுப் போர், இனவாதப் போர் போன்ற பல்வேறு காரணங்களால் சொந்த நாட்டில், தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் நாடு அவர்களை அகதி என்று அடையாளப்படுத்தி தனி முகாம்களில் அடைத்துவிடுகிறது. அகதி முகாமில் இருப்பது என்பது வேலிக்குள் வாழ்வது போன்றது. வேலி தாண்டி வேறெங்கும் சுதந்திரமாகச் சென்றுவர முடியாது. அப்படிப்பட்ட ஓர் அகதி முகாமில் வாழ்பவர்களைப் பற்றி விகடன் இணைய தளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அகதி முகாமில் வாழ்பவர்களின் மன நிலை, அவர்கள் எவ்வாறு அகதிகளானார்கள், தனிமையின் தவிப்புகள், தங்கள் சொந்த நாட்டின் நினைவுகளை ஏந்தி வருந்தும் நிலை.. என அகதிகளின் அத்தனை உணர்வுகளையும் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். அகதி முகாமில் பணியில் இருந்ததால் இப்படி அகதிகளின் அத்தனை உணர்வுகளையும் அவரால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. அகதிகளின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் அறிய முகாமுக்குள் செல்லுங்கள். |