Description |
அவர் (லெனின்) இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஜாக்லண்டனுடைய ஒரு கதையை நான் அவருக்குப் படித்துக் காட்டினேன். இந்தப் புத்தகம் வாழ்க்கை மீது நேசம் - அவருடைய அறையில் இப்போது மேஜை மீது நிலை கொண்டுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த கதை. ஒரு பனி படர்ந்த பாழ் வெளியில் - அங்கு அதற்கு முன் ஒரு மனிதனும் காலடி எடுத்து வைத்திருக்கவில்லை - நோயுற்று பசியினால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் ஆற்றுத் திட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். அவனுடைய உடலில் தெம்பு இல்லை; அவனால் நடக்க முடியவில்லை, ஊர்ந்து செல்கிறான்! அவனுக்குப் பின்னால் பசியால் வாடி மரணத் தறுவாயில் உள்ள ஓர் ஓநாயும் ஊர்ந்து செல்கிறது. மனிதனுக்கும் ஓநாய்க்கும் இடையே நடைபெறும் சண்டையில் மனிதன் வெல்கிறான். பாதி மரணமடைந்த, பாதி-பித்துப்பிடித்த நிலையில் அவன் தனது லட்சியத்தை அடைகிறான், இலியிச்சை இக் கதை மிகவும் ஈர்த்தது. மறு நாள் ஜாக் லண்டனின் மற்றொரு கதையை அவர் என்னைப் படிக்கச் சொன்னார். எனினும், ஜாக் லண்டனின் நூல்களில் சக்தி வாய்ந்த அம்சம் மிக மிக பலவீனமான அம்சத்தோடு கலக்கப்படுகிறது. இரண்டாவது கதை முற்றிலும் வேறுபட்டதாயிருந்தது - அது பூர்ஷுவா ஒழுக்கத்தை போதித்தது! ஒரு கப்பலின் தலைவன் -கப்பலிலுள்ள தானியத்தை நல்ல விலைக்கு விற்பதாக அதன் உடமையாளனுக்கு உத்தரவாத மளிக்கிறான்; அவன் தனது வார்த்தையைக் காப்பதற்காகத் தனது உயிரையே பலியிடுகிறான். இலியிச் சிரித்துவிட்டு படிக்க வேண்டாம் என்பதற்கு அடையாளமாகக் கையை அசைத்தார். நான் அவருக்குக் கடைசித் தடவையாகப் படித்துக் காட்டியது அதுவே." |