Description |
இந்தியாவில் உள்ள நவீன மருத்துவமனைகள் முதல் அநேகமாக எல்லா மருத்துவமனை வளாகத்திலும் நிச்சயம் ஏதோ ஒரு கோயில் இருக்கும். காரணம் மக்களின் நம்பிக்கை. ஒரு நோய் குணமாக மருந்து மாத்திரைகள் பாதி காரணமாக இருக்கின்றன. மீதி காரணம், மருத்துவத்தின் மீதும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட இறையின் மீதும் பாதிக்கப்பட்டவர் கொண்டுள்ள நம்பிக்கை. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை அப்படியா? ஈட்டும் செல்வத்தில் பெரும் பகுதி நோய் தீர்க்கவே தீர்ந்துபோகிறது. வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய மருத்துவமனைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஏழை எளியோர், தங்களுக்கு ஒரு நோய் வந்தால் தங்கள் இஷ்ட தெய்வத்தின் சந்நிதிக்குச் சென்று வேண்டுவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் அதிகம் இல்லாத காலத்தில் கிராம மக்கள் நாடிச் சென்றது நாட்டு மருத்துவத்தையும் கோயில்களையும்தான். அவர்களுக்கு மனதளவில் முதல் மருத்துவர் கடவுளர்தான். ‘நேர்த்திக் கடன்’ செலுத்துகிறேன் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளும்போதே, அவர்களின் பாதிப்பு பாதி குறைந்து விட்டதாக நம்புகிறார்கள். பக்தர்களின் பிணி அகற்றி நலம் நல்கும் கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கின்றன. அப்படியான சில கோயில்களின் வரலாற்றையும் அந்தத் தெய்வங்கள் நோய்களைத் தீர்த்துவைக்கும் மகிமை பற்றியும் கூறுகிறது இந்த நூல். பிணி நீக்கும் திருப்பணியாற்றும் ஆலயங்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்! |