Description |
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான வழிமுறைகள்... போன்றவற்றில் எழும் சந்தேகங்களுக்கு உரிய பதிலை நாமே தேடும்போதுதான் அறிவு தெளிவு பெறும். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் அர்த்தம் என்ன? கர்ம யோகம், ஞான யோகம் இரண்டில் எது சிறந்தது? மனிதனின் உடலில் அவனது உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது? மறுபிறவி என்பது உண்டா? _ இதுபோன்ற ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு இந்த நூலில் பதில் கிடைக்கும். மனதில் எழும் சந்தேகங்களுக்கு, பதில் எங்கு பெறுவது; எப்படி பெறுவது என்று வாசகர்கள் தேடி அலையக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், சக்தி விகடன் இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். அப்படி வெளிவந்த கேள்வி_பதில் பகுதியைத் தொகுத்து, ‘ஐயம் போக்கும் ஆன்மிகம்’ எனும் தலைப்பில் ஏற்கெனவே நான்கு பாகங்கள் விகடன் பிரசுரத்தில் வெளியாகி, வாசகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. இது ஐந்தாவது பாகம். இந்தத் தொகுப்பும் ஆன்மிக வாசகர்களின் அறிவுத் தேடலுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்! |