Description |
குழந்தைமையின் மென்மையான வெளி நம் ஒவ்வொருவர் மனதின் ஆழங்களிலும் தனது மெல்லிய இழையைப் பரப்பியிருக்கிறது, இதில் ஒவ்வொரு பெண்ணின் தனி வகையிலான மனப்பரப்பும் சிறப்பு பெற்றதாகும். நுணுக்கமான திரை சூழ்ந்த பெண்ணின் பால்யத்தை , தனிமையின் நிறம் பூசிய பக்கத்தை, தானும் தனது அகமும் குளிர் நீரால் நனைத்து மன அவசம் கொள்வதான நிலையை வார்த்தைகளின் குமிழில் இட்டு நிரப்பி கவிதைகளாக்கி இருக்கிறார் தீபிகா நடராஜன். தனிமையும், துரோகமும் கொண்ட அஞ்சறைப்பெட்டி அடுக்கில் தனது கனவுகளையும் சேர்த்து பூட்டி வைத்து இருக்கிறார் கவிஞர். தன் தனிமையை வெட்டும் கண்ணாடியாய் தன்னையே வரித்துக் கொள்ளும் மனம், ஓர் புத்தகத்தோடும் கோப்பைத் தேனீரோடும் தன் அறையைப் பூட்டி கொள்கிறது. உயிர்த்தெழும் கவலைகளுக்கு, அதை மறக்கச் செய்யும் நிவாரணியாய் சிறகோ சிலுவையோ, வேண்டி இயல்பாய் தன்னை காற்றுக்கு எதிர் திசையில் கடத்துகிறது தீபிகா நடராஜனின் கவிதைகள். நம்பிக்கையின்மேல் கல்லெறிந்து செல்பவர்களிடம், தனது மிக மெல்லிய சிறகை அசைத்து உரக்கச் சொல்லும் இச்சிறு பறவை, "....அவ்வளவு தனித்திருக்கிறேன் நான்.ஏதோ ஒரு நொடியில் சிலிர்த்து எழக்கூடும் இந்த சிறுவாழ்வு…" |