Description |
நோயின் சோதனை நம்மை மருந்தின் பக்கம் திருப்புவதற்கு முன்னால் நம்மைப் படைத்தவனின் பக்கம் திருப்ப வேண்டும். ஏனெனில், அவன்தான் நோயையும் படைத்தவன். மருந்தையும் இறக்கியிருப்பவன். அவனது இரட்சிப்பின் நிவாரணப் பாதை ஒன்றைத் தேடி அடைந்து அவனையே சார்ந்து வாழ்கிற அனுபவம்தான் மருத்துவம். இதில் பிரார்த்தனையின் பங்கு ஒரு மருந்துக்கு உயிரை அளிப்பதாகவும், எந்த மருந்துமே கிடைக்கப் பெறாத ஒரு நோயாளிக்கு அதுவே மருந்தாகவும் அமைகின்றது. இஸ்லாம் நோயாளியை ஓர் எந்திரனாக (Robo) அணுகாமல், மனமும் உடலும் முயங்கி இயங்கும் உயிர்மைப் படைப்பாக அணுகி வழிகாட்டுகின்றது. எனவே, மருத்துவத்தை நெறிப்படுத்தும் ஆன்மிக உயிர்ப்பை அளித்து நோயாளியின் பலவீனத்தை அகற்றி ஆறுதல்படுத்துகிறது. இதனால் இங்கு மருத்துவரும் நோயாளியுமே இறை உதவியை வேண்டி நிற்கிறார்கள். பொறுமையும் சேவை உணர்வும் கருணையும் அவர்களை வழிநடத்துகின்றன. ஏகன் அல்லாஹ் மட்டுமே உண்மை இரட்சகனாக அவர்களுக்கு அறியப்படுகின்றான். ஷெய்க் காலிது அல்ஜுரைசீ இந்நூலில் நபிவழி பரிந்துரைத்த பல நிவாரண முறைகளைப் பட்டியலிடுகிறார். அதனுடன் ஓதிப்பார்த்தலின் நெறிமுறைகளையும் முன்வைக்கின்றார். நாத்திகத்தின் தாக்கத்திலிருந்து மருத்துவத்தையும் முஸ்லிம்களையும் ஒருசேர காப்பாற்ற வேண்டிய இக்காலத்தில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. |