Description |
அசாதாரணமானது, முக்கியமானது எனச் சொல்லக்கூடிய சிறுகதைத் தொகுப்பு இது. கிரிதரன் கொண்டுள்ள ஆர்வங்கள் பல படிகளாக இருக்கின்றன. மேற்கத்திய இசை, இந்திய - மேற்கத்திய வரலாறு, பண்பாட்டு மோதல்கள் இவை அனைத்தும் இந்தக் கதைகளுக்குள் வருகின்றன. வடிவ ரீதியாகவோ மொழி சார்ந்தோ குறையில்லாத கதைகள். - ஜெயமோகன் ரா. கிரிதரனின் ‘பல்கலனும் யாம் அணிவோம்’ தமிழில் எழுதப்பட்டுள்ள மிகச்சிறந்த அறிவியல் புனைவுகளில் ஒன்று எனத் தயங்காமல் சொல்வேன். அசலான இந்திய சிந்தனைகளை அறிவியலுடன் இணைத்து இக்கதையை உருவாக்கியிருக்கிறார். மனிதனின் ஒரு பகுதி இயந்திரமாக மாறுவது அறிவியல் புனைவில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றுதான். இத்தகைய உயிரிகளை ‘சைபார்க்’ என்றழைப்பார்கள். சைபார்க் ஓர் அதிமானுடன். மனிதனின் புலன் மற்றும் செயல் எல்லையை அவனுடன் இயைந்து பொருந்தும் இயந்திரத்தின் துணைகொண்டு கடப்பவன். சைபார்க் பற்றிய கதைக்கு திருப்பாவையிலிருந்து ‘பல்கலனும் யாம் அணிவோம்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார். - சுனில் கிருஷ்ணன் பொதுவாக வரலாற்றுப் புனைவுகள் ஒரு நிதானமான மொழியில்தான் எழுதப்பட இயலும். தரவுகளை கணக்கில் கொண்டே அவற்றின் புனைவுத்தளம் விரியவும் இயலும். ஆகவே வரலாற்றுப் புனைவுகளுக்கு யதார்த்தவாதக் கூறல்முறை ஏதுவானதாக இருக்கிறது. கிரிதரன் இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் இந்த யதார்த்தக் கூறல் முறையைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் அவரது தனித்திறன் இந்த யதார்த்தக் கூறலை ஊடறுக்கும் ஓர் அம்சத்தை கதையில் சேர்ப்பதுதான். |