Description |
எழுத்தாளன் என்பவன் ஒரு நடுநிலைமையாளன் என்பது ஒரு புத்திபூர்வமான கருத்தல்ல. சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் சுகபோகிக்கும் நித்திய தரித்திரனுக்கும் இடையில் நின்று ஞானோபதேசம் செய்வது சுலபம். பெயரும் புகழும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலன், நீதி எப்படிச் சாகாவரம் பெற்று நிலைக்க வேண்டுமோ, அநீதியும் அப்படியே சாகாவரம் பெறச் செய்வதுதானாகும். ‘இலக்கியம் ஒன்றினால் மட்டும் மனிதனிடத்தில் படர்ந்துள்ள சின்னத்தனங்களை ஒழித்துக்கட்ட முடியும்’ என்று வீராப்புப் பேசும் இலக்கிய கர்த்தாக்களும் ‘அந்தப் பணி நம்முடையதல்ல; அது அரசியல்வாதிகளுடையது’ என்று ஒப்பாரி வைக்கும் இலக்கிய கர்த்தாக்களும் இருக்கிறார்கள். உண்மையில் இந்த இருதுருவ இலக்கிய கர்த்தாக்கள்தான், மக்கள் இலக்கியத்தின் எதிரிகள் என்பது என் கருத்து. மகிழ்ச்சியான வாழ்வு என்பது, ஒரு சமுதாய அமைப்பில் தற்செயலான நிகழ்ச்சி என்று நெடுங்காலமாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் அது தற்செயலான ஒன்றல்ல. இந்தப் பழைய கொள்கையைத் தகர்த்து வாழ்வு என்ற பதத்திற்கான இலக்கணமமைந்த வாழ்க்கை முறையை அமைப்பதென்பது இலக்கிய கர்த்தாவால் இயலாததுதான். ஆனால் அதற்கான பணியில் ஈடுபட்டுழைக்கும் சக்திகளோடு இணைந்து செயற்பட்டு அந்தப் புதிய யுகத்தைத் துரிதப்படுத்துவது ஒன்றும் அவனால் இயலாத காரியமல்ல. இந்தக் கருத்துகளை மனதிற்கொண்டு, ஒரு எழுத்தாளன் தனது இலக்கியத்தைச் சிருஷ்டிப்பதன் மூலம்தான் நாட்டிற்கும் அவனுக்கும் நன்மை ஏற்படும் என்பது என் ஆணித்தரமான கருத்து. நான் கண்டு, கேட்டுணர்ந்த அனுபவங்களின் பகைப்புலனில், எந்தவிதத் துன்பம் நேரினும், மனிதனுக்கு வாழ்க்கையிலேயே பற்றும் நம்பிக்கையும் மேலோங்க வேண்டுமென்ற அடிநாதத்தை முதன்மைப்படுத்தி என் கதைகளைச் சிருஷ்டிக்கிறேன். |