Description |
காலங்காலமாக வந்த மரபுகளைத் தாக்கும் நாவலாக இப்புத்தகம் விமர்சிக்கப்படுகிறது. எனினும் மொழியைக் கையாளும் முறையாலும் படிமங்களை உபயோகிக்கும் விதத்தாலும் இதே மரபை ஏற்றும் நிற்கிறது. பேராசிரியர் அனந்தமூர்த்தியின் எழுத்துகளில் இந்நாவலின் கதாநாயகன் பிராணேஸாசாரியன் தன் தர்மத்தின் மீது ஐயம் கொண்டாலும் அதே நேரத்தில் ஆழமான சிரத்தையும் கொண்டு, நிர்த்தாட்சண்யமாய் சிந்தித்து, பிரச்சினையிலிருந்து பின்வாங்கி ஓடாமல் எதிர்கொண்டு நிற்கிறான். உயிர் வாழ்தலையே ஒரு பொருள் பொதிந்த அனுபவமாகப் பார்க்கிறான். அவனது தெய்வீகப் பயணம் உயிர் தரிப்போடு கூடிய ஒரு புதிய பயணமாக, தன் கலாச்சாரத்தையே புதுக்கண் கொண்டு நோக்கும்படி செய்யும் பயணமாக அமைகிறது. பல எதிர்ப்புகளைச் சந்தித்து, இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்ட இந்நாவல், கன்னட நாவல் உலகில் பின்பு ஏற்பட்ட மகத்தான சாதனைகளுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. |