Description |
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் வாழும் தொதவர், இருளர், முதுவர், பளியர், குறும்பர் உள்ளிட்ட 37 பழங்குடிகள் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார் பக்தவத்சல பாரதி. ஆதியில் பெண்ணே முதல் விவசாயி; அவள் பயன்படுத்திய முதல் விவசாயக் கருவி இன்று எவ்வாறு தாய்த்தெய்வங்கள் கையில் சூலாயுதமாக மாறியிருக்கிறது? பழங்குடிகள் இன்றும் மூதேவியைக் கும்பிடுகிறார்கள், இறப்பவர்களுக்குக் கல்மாடம் அமைக்கிறார்கள், உடன்போக்கில் மணம் செய்கிறார்கள், முலைவிலை கொடுத்து மணப்பெண் பெறுகிறார்கள், மறுபங்கீட்டுப் பொருளாதார முறையைக் கண்டுபிடித்தவர்களும் அவர்களே. சங்க இலக்கியத்தின் முன்வடிவங்களை வாய்மொழியாகவும் சாதியமைப்பின் தொல்வடிவத்தையும் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக, தமிழகத்தில் வாழும் பழங்குடிகளின் சமூகம், பண்பாடு, மரபு எனப் பல்வேறு தளங்களிலும் விரிகிறது இந்த நூல். அத்துடன் நாகரிக வளர்ச்சியின் விளைவாக பழங்குடிகளின் வாழ்வில் காலனியம், உலகமயம், தனியார்மயம் முதலான போக்குகள் நிகழ்த்திவரும் தாக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது. இதன்மூலம் தன் வகைமையில் முதலிடத்தைப் பெற்றுக் கொள்கிறது. பழங்குடி மக்கள் குறித்து ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல். |