Description |
செயலின்பம், விடுதலை ஊக்கம், அழகு என்னும் பேறுநிலை போன்றவை குட்டிரேவதி கவிதைகளின் நித்திய அகவிசைகள். அவை இந்தியச் சூழலில் வருணமயமாக்கப்பட்ட சாதியுடலை சமூக, பால்நிலை அதிகார மரபுகள்வழி வரையறுக்கப்பட்ட மொழியுடலை மற்றமை நோக்கி, பேரண்டம் நோக்கி விடுதலை செய்கின்றன. இதன்மூலம் ஒரு தனிப்பட்ட சுயத்தின் குரலாக அல்லாமல், தன்னிலிருந்து ஆதிப்பெண் வரையான புதைப்படிவங்கள் தேடி, பெண் எனும் மொத்தப் பிரபஞ்சத்தின் கூட்டு உடல்களையும் அதன் அறிதல்களையும் அகழ்ந்து வருகின்றன. காதல், புணர்ச்சி எல்லாம் வரலாற்று கதியிலிருந்து விடுவிக்கப்பட்டு இயற்கையின் ஞானத்திலும் இசைமையிலும் வைக்கப்பட்டிருக்கின்றன; சூரியன், கடல், வானம் எனப் பிரபஞ்சத்தின் பூரணத்துவம் வாய்ந்த நித்திய படிமங்களோடு இக்கவிதைகள் வேட்கையுடன் உரையாடுகின்றன. அத்துடன் சூழலியல், ஈழம், மானுட உரிமைகள் எனக் காலத்தின் சமூக உடலாகி வலியும் மீட்சியும் கொண்டு துடிக்கின்றன. குட்டி ரேவதியின் பத்துத் தொகுதிகளிலே ஆறுநூறு கவிதைகளாலான இந்த நூல், சமகாலப் பெண் படைப்புகளில் ஒரு மைல்கல். இதன் மூலம் அவருடைய கவிதைகள் காலத்தின் மீதான அதிர்வு என்பதாக மட்டுமல்லாது, தன்னளவில் நிறைவான மாற்று மெய்ம்மையையும் ஒரு மெய்த்தளத்தையும் உருவாக்கியிருக்கிறது. |