Description |
ஒரு மனிதனின் இடப்பெயர்வில், புதிய சூழலில் ஏற்படும் கலாச்சார மற்றும் அரசியல்ரீதியிலான நெருக்கடிகளையோ, சமூகநீதியிலான சவால்களையோ அக்கறைகொள்ளவில்லை. புதிய தேசத்தில் வாழ்வதற்கான தயார்ப்படுத்தல்களையும், அங்கே தனது கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும், அதனடியாக மனதில் படிந்துபோயுள்ள பழக்க வழக்கங்களக்கும் இடையிலான முரண்பாடுகளையோ, அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையோ கோ.நாதனின் கவிதைகள் கவனத்திற்கொள்ளவில்லை. ஆனால், இவற்றுக்கு அப்பால், பழக்கப்பட்ட சூழலுக்கும், மனதில் வடிவமைக்கப்பட்ட உணர்ச்சி சார்ந்த நினைவுகளுக்கும், புலம் பெயர்ந்து சென்ற பழக்கமற்ற சூழலுக்கும், அங்கே உணர்ச்சி சார்ந்து எதிர்கொள்ளும் வேறுபாடுகளுக்கு மிடையிலான சவால்களையும், நெருக்கடிகளையும் மன அலைச்சலின் வழியே எதிர்கொள்ள முயற்சிக்கிறது கோ.நாதனின் கவிதைகள். அந்த வகையில் இவருடைய கவிதைகள் முக்கியமானவையாகின்றன." |