Description |
ஷங்கரின் கவிதை நடை, புனைகதையின் தசைநார்களை ஒதுக்கிவிட்டு கவித்துவத்தின் நரம்புகளால் மட்டுமே விசித்திரமாக ஓர் உயிரை நடமாடச் செய்யும் வித்தை. காமமும் மரணமும் சரிநிகராக இவர் கவிதைகளில் கூர்மையாகக் கண்சிமிட்டிக் கொண்டேயிருக்கின்றன. இவ்விரண்டுக்குமே நித்தியத்தை விரும்புகிற மனித எத்தனங்களைத் தீண்டி உலுக்குகிற குணம் உண்டு. காமத்தையும் மரணத்தையும் வயல்களாக உழுது அறுவடை செய்கிற நுட்பமே அவற்றைச் சிந்தித்து வரையறை செய்து சூத்திரமாக்கி கவிதையாக வைத்துக்கொள்வதும். அவ்வகையில் மரணம், பிரயாண ஞாபகத்தை யாரிடமும் பகிர இயலாமல் ஆக்கும், தனித்தன்மையைப் போன்ற ஒரு மாய நகரமாகிறது. அவருக்கு, காமம் புழக்கடைப் பாத்தியில் முறைவிட்டிருக்கும் பசிய இலைகளாக ஒளிர்கின்றன. |