Description |
’தமிழ் இந்து’ நாளிதழின் இணைப்பான ‘இந்து டாக்கீஸ்’ இதழில் கடந்த 35 வாரங்களாக “தரைக்கு வந்த தாரகை” என்னும் தலைப்பில் நடிகை திருமதி பானுமதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தஞ்சாவூர்க் கவிராயர் எழுதி வந்ததைப் படித்து மகிழ்ந்த பலரில் நானும் ஒருவன். பின்னணிக் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இதழ்களை அசைத்துக் காட்டினால் போதும் என்ற நிலை திரையுலகை ஆளுமை செய்யும் காலகட்டத்தில், தனது சொந்தக்குரலில் பாடியும், நடித்து, இயக்கியும் ஒளிர்ந்த நடிகை திருமதி பானுமதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுதிய முறை படிப்போரின் உள்ளங்களைக் கவரும் தன்மை வாய்ந்ததாகும். அதிலும் இறுதி அத்தியாயத்தில் விதவையாக நடிக்கும் போது தனது காலில் அணிந்திருந்த மெட்டியை பானுமதி தானே கழற்றியதும், அதற்குப் பின்னால் அதை மீண்டும் அணிய முடியாமல் போன அவரது வாழ்வில் நிகழ்ந்த சோகத்தையும் சுட்டாமல் சுட்டி இக்கட்டுரைத் தொடரை முடித்திருப்பது அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழச் செய்துள்ளது. |