Description |
முதல் தொகுப்பினை மறுபடியும் கையில் எடுத்து வாசித்துப் பார்ப்பது என்பது பழைய கறுப்பு வெள்ளை புகைப்படத்தைக் கையில் வைத்து பார்ப்பதை போன்றது, நானும் வளர்ந்திருக்கிறேன், எனது எழுத்தும் வளர்ந்திருக்கிறது. இந்த மாற்றங்களை ஏற்படுத்திய காலம் இரண்டினையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதல்தொகுப்பு வெளியாகின்ற நாளில் இதை எத்தனை பேர் வாசிக்கப்போகிறார்கள், எவ்வளவு வரவேற்பு பெறும் எனத் தெரியாத நடுக்கமும் கவலையும் இருந்தது. ஆனால் புத்தகம் வெளியான சில வாரங்களிலே பெரியவரவேற்பு பெற்றதுடன் இன்றுவரை எனது முதற்தொகுப்பின் கதைகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகின்றவர்களைக் காணமுடிகிறது. அந்த வகையில் நான் பாக்கியசாலி. இன்று எனது முதற்தொகுப்பு அப்படியே மறுபதிப்பு காணுவது சந்தோஷம் தருகிறது. என்றோ பள்ளிவயதில் நோட்டில் ஒளித்து வைத்த மயிலிறகை திரும்பக் கண்டெடுத்துப் பார்ப்பது போல மனது குதூகலம் அடைகிறது. |