Description |
உங்களுடைய விருப்பப்படி பிறருக்குத் தீங்கிழைக்காத வகையில், உங்களுக்குள் என்ன விருப்பங்களெல்லாம் எழுகின்றனவோ அந்த விருப்பங்களை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்பிவிட்டால், ஆழ்ந்து முடிவெடுத்து விட்டால் உங்களை மீறி அவை எல்லாம் உங்களுக்கு நடந்து கொண்டே இருக்கும். நான் ஓர் உண்மையைச் சொல்கிறேன். அதை நீங்கள் நம்பவில்லையென்றாலும் அது உண்மைதான் என்று நான் இருப்பேன். ஒருவர் ஒரு பொய் சொல்கிறார். அதை நம்புவதற்கு ஒரு மனிதர் இருந்தால்தான் அந்தப் பொய் உயிர் வாழும். இல்லையென்றால் அது செத்துப் போகும். பொய்யின் நோக்கமே அடுத்தவரை நம்ப வைப்பதுதான். உண்மைக்கு அப்படி ஒரு நோக்கமே கிடையாது. உண்மை சிவம். அது தன்னளவில் இருந்துவிடும். அதற்கு இரண்டாவது நபர் தேவையில்லை. நம்பினாலும் சரி நம்பவில்லையென்றாலும் சரி, நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் நிராகரிக்கலாம் அது உங்கள் முடிவு. ஆனால் நான் சொல்வதுதான் உண்மை என்பது உண்மையின் வலிமை. ஒழுங்கு என்பது ஒவ்வொருவரின் விடுதலையிலிருந்து உருவாவது.உங்களுக்கான ஒழுங்கு எது என்பதை உங்களுடைய விடுதலையிலிருந்து நீங்கள் தீர்மானிக்க வேண்டும். கூடி வாழ்தல் என்பது என்ன பெருந்தன்மையா? அடிப்படையான இயல்பு. அது பெருந்தன்மையோ தியாகமோ அல்ல. அண்டை வீட்டுக்காரருக்கு வேளாண் பணிகள் செய்வதற்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் இப்படிச் சொல்வது, “நான் பக்கத்து வீட்டுக்கெல்லாம் சென்று சேவை செய்கிறேன்” என்று பெருமைப்பட்டுக் கொள்ள அல்ல. அது சேவையல்ல. கூடி வாழ்தல் என்பது, மனிதர் இயல்பு. கூடி வாழும் வகையில் படைக்கப்பட்டவர்கள் கூடித்தான் வாழ வேண்டும். பிரிந்தால் அழிவு நேரும். பிரிந்ததால் இன்றைக்கு வேளாண்மை எனும் தொழிலே அழிந்து கொண்டிருக்கிறது. |