Description |
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று புத்தகங்கள். தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடிகளுள் ஒருவராகிய உ.வே.சாமிநாதையர் (1855 &1942) அவர்கள். ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ’மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என மகத்தான சாதனையாளர்கள் வலம்வந்த நவீனத் தமிழ்ச் சூழலில் உ. வே. சா. என்னும் ஆளுமை உள் நுழைந்தபோது ஆரோக்கியமான அதிர்வுகளும் அடுத்தகட்டப் பாய்ச்சலும் தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்தன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதற்கு நூல்களில் இடம்பெறும் அவரது முகவுரைகளே சான்று. காலவெள்ளத்தில் கரையும் முன்னே அவரது 106 நூல்களிலிருந்து 130 முன்னுரைகளை அவர் வாழ்ந்த காலம்வரை வெளிவந்த பதிப்புகளிலிருந்து கண்டறிந்து முகப்பேடுகளுடன் முழுமையாகப் பதிப்பித்திருக்கிறார் ப. சரவணன். |