Description |
பொதுவாக திறமையான கலைஞர்கள் தன்மானமும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பணம், புகழைவிட தான் கற்றறிந்த கலைக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு நாகஸ்வரக் கலைஞன்தான் இந்தப் புதினத்தின் நாயகன். நாகஸ்வரத்துக்கும் நாட்டியத்துக்கும் முதலில் போட்டி ஏற்பட்டு பின்னர் இரண்டும் ஒன்றாகக் கலப்பதே இந்தப் புதினத்தின் மையம். சிக்கல் சண்முக சுந்தரம் எனும் நாகஸ்வரக் கலைஞனின் வாழ்வில் ஏற்படும் புகழ், காதல், பிரச்னைகள், ஏற்படும் இடையூறுகள் இவற்றை சுவாரஸ்யமான புதினமாக வடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு. ஆனந்த விகடனில் அவர் பணியாற்றியபோது 1956 முதல் 1958-ம் ஆண்டு வரை கலைமணி எனும் புனைபெயரில் தில்லானா மோகனாம்பாள் தொடரை எழுதினார். இத்தொடர் ஓவியர் கோபுலு வரைந்த அழகிய ஓவியங்களுடன் வெளிவந்தது. பின்னர் இது திரைப்படமாகவும் வெளிவந்து தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் தனித்த இடம்பிடித்தது. மோகனாம்பாள் எப்படி தில்லானா மோகனாம்பாள் ஆனாள் என்பதை அறிந்துகொள்ள வாருங்கள். |