Description |
யுனிலிவர் கம்பெனி காட்டை அழித்த கதை நம்மைப் பதறவைக்கிறது. “இப்படிப்பட்டவர்களா நம்மை ஆள்கிறார்கள்?” என வாசகனை நிலைகுலையச் செய்கிறது ஒரு கட்டுரை. திருநங்கைகள் குறித்த இரு கட்டுரைகளும் காலத்தின் தேவை என்பேன். நீட் தேர்வு பற்றிய இரு கட்டுரைகள் பல உண்மைகளை நமக்குத் திறந்து வைக்கின்றன. வேலைக்குச் சென்று சம்பாதிக்காத மனைவிக்குத் திருமண சொத்தில் பங்கு வேண்டுமா? என்கிற கட்டுரை அவசியம் பரவலாகப் பகிரப்பட வேண்டும். உலக அளவிலும் இந்திய அளவிலும் மரண தண்டனை எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்பட்டது என்பதை வரலாற்றுப்பூர்வமாக ஆய்வு செய்கிறது. சமகாலச் சமூக, அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளின் மீது எதிர்வினை ஆற்றுவதோடு அப்பிரச்னைகளின் மீதான சட்டரீதியான வாய்ப்புகளையும், சவால்களையும், சிக்கல்களையும் மு.ஆனந்தன் முன்வைக்கிறார். வரலாற்றுப்பூர்வமாகத் தன் வாதங்களை அடுக்குகிறார். அதே சமயம், இவர் ஒரு படைப்பாளியாகவும் இருப்பதால், மொழியில் ஒரு எள்ளலும் நகையுணர்வும் ஊடாட, பல இடங்களில் பொருத்தமான கவிதை வரிகளைக் கோர்த்து வாசிப்பை இன்னும் சுவைமிக்கதாக ஆக்குகிறார். – ச.தமிழ்ச்செல்வன் |