Description |
1885-ஆம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட திரு எட்கர் தர்ஸ்டன் (Mr. Edgar Thurston) என்பவர் தம்முடைய இந்தப்பணியுடன், இன இயல் ஆய்வுப்பணியையும் மேற்கொண்டார். இதன் விளைபலனாக 1909 ஆம் ஆண்டில் வெளி வந்ததுதான் "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" (Castes and Tribes in Southern India) என்ற ஆங்கில நூலின் ஏழு தொகுதிகள். இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மத்திய இந்தியாவை சேர்ந்த கோண்ட் பழங்குடிகள் தொடக்கி, இன்றளவும் இன இயல் ஆய்வாளர்களுக்கு புதிரானவர்களாக உள்ள தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோட்டை வேளாளர் வரையான இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் சாதியினரையும் பற்றிய விவரங்கள் இதனுள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்பாகத் தர்ஸ்டன் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். பலரோடு கடிதங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தமக்கு ஏற்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொண்டுள்ளார். திரு எட்கர் தர்ஸ்டன் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த Castes and Tribes in Southern India என்ற நூலின் ஏழு தொகுதிகளையும் முனைவர் க.ரத்னம் அவர்கள் தனது அரும் முயற்சியினால் தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார். அதனை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை மேற்சொன்னவாறு "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இன வரைவியலை தமிழில் அறிந்து கொள்வதற்கு இன்றளவும் துணையாக நிற்கும் இந்த ஏழு தொகுதிகளும் ஆய்வாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ஓர் அரிய பொக்கிசமாகும். |